Sunday, July 7, 2013

காந்தியைக் கொல்வோம் (வெளிச்சம்)

காந்தியின் கொள்ளுப் பெயரன் துசார் காந்தி எழுதிய காந்தியைக் கொல்லுவோம்  என்கிற நூல் சமீபத்தில்  பரபரப்பினை  உண்டாக்கிய ஒன்று.
இந்நூலினை, தான்  எழுதிய காரணம் பற்றி துசார் காந்தி அவர்கள் குறிப்பிடும்பொழுது,  சமீப காலங்களில் இந்துத்துவ  போன்ற  அமைப்புகள் திட்டமிட்ட ஒரு பிரச்சாரத்தினைச் செய்து வருகிறார்கள். காந்தி கொல்லப்பட்டதை நியாயப்படுத்தி வருகிறார்கள். கோட்சேவை ஒரு வீரப்  புருஷனாகச் சித்தரித்து வருகின்றனர்.
காந்தியின் தூண்டுதலால்தான் இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை உண்டாகியதாகவும், சுதந்திர இந்தியாவை வலியுறுத்தி 55 கோடி ரூபாயினைப் பாகிஸ்தானுக்குக் கொடுக்க வைத்தது காந்திதான் என்றும், எப்பொழுதுமே சிறுபான்மை இசுலாமியர்களுக்கே காந்தி தனது ஆதரவை வெளிப்படுத்தியதும், அதனால் பெரும்பான்மை இந்துக்களுக்கு எந்தக் கேடு வந்தாலும் கவலை கொள்ளாமல் இருந்தது போன்றவை இந்துமத வெறியர்கள் காந்தியின் கொலைக்கான காரணங்களாகக்   கூறும்  முக்கியக் குற்றச்சாட்டுகள். இதைப் பற்றி எந்தக் கவலையும் சொரணையும் இல்லாமல் காந்தியவாதிகளும், காங்கிரஸ்காரர்களும் வாளாக இருப்பதுதான் வேதனை என்கிறார் துசார் காந்தி. இந்தச் சூழ்நிலை தொடர்ந்தால் இந்தியாவில் மீண்டும் பார்ப்பனிய பனியா  கூட்டங்கள் தலைதூக்கி இந்து ராச்சியம் என்கிற பெயரில் மீண்டும் பார்ப்பனர்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி வருணாசிரம தர்மத்தை நிலைநிறுத்திவிடுவார்கள் என்கிற கவலையோடும் கோபத்தோடும் எழுதப்பட்ட நூல்தான் காந்தியைக் கொல்லுவோம் என்கிறார். ஏன் இந்த விந்தையான தலைப்பு என்று கேட்கத் தோன்றும். காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சே மற்றும் அவனது கூட்டாளி ஆப்டே பூனா நகரத்தில், இந்து மகாசபையின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்கள்.
இவர்கள் அக்ரனீ என்கிற நாளிதழை நடத்தி வந்தார்கள். (இந்நாளிதழ்  தடை செய்யப்பட்டவுடன் இந்து ராஷ்டிரா  என்கிற வேறு பெயரில் அதனை மீண்டும் வெளிக்கொண்டு வந்தனர்). இப்பத்திரிகை மூலமாக அவர்கள் இசுலாமிய எதிர்ப்பு விஷக் கருத்துகளைப் பரப்பி வந்தனர். அத்துடன் சர்வர்கரின்  நச்சுக் கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்வதும் அவர்களது பிரதான வேலையாக இருந்தது. இந்தப் பத்திரிகையை நடத்த அவர்கள் இசுலாமிய வெறிக் கொண்ட பெரும் பணக்காரர்களான மார்வாரிகள், பனியாக்கள் போன்றோரை நம்பி இருந்தனர். இவர்களிடம் இசுலாமியர்களை எதிர்த்து இதைச் செய்வோம் அதைச் செய்வோம் என்று வாய்ச் சவடால்விட்டு பணத்தைக் கறந்து பத்திரிகையினை நடத்தி வந்தனர். இதனால் ஏமாற்றமடைந்த பண முதலாளிகள் பணம் தருவதை நிறுத்திவிட்டனர். இவர்களது நம்பகத்தன்மை பெருமளவில் குறைந்து வருகின்ற சமயத்தில், ஏதாவது செய்து தங்களை நிலைநிறுத்திக் கொள்ள  யோசிக்கின்ற வேளையில், கோட்சே நாம் ஏன் காந்தியைக் கொல்லக் கூடாது எனக்  கேட்கிறான். அந்தக் கேள்வியே  இந்திய வரலாற்றில் அழிக்கமுடியாத இரத்தக் கறையை ஏற்படுத்தியது. துசார் காந்தி இதனையே தன் நூலுக்குத் தலைப்பாகக் கொள்கிறார்.
காந்தியைக் கொன்றதற்குக் கூறப்படும் காரணங்கள் புதியவை ஒன்றும் அல்ல. ஏற்கெனவே கோட்சே நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலம்தான். அதைத்தான் இன்று இந்துமத வெறியர்கள் தூசி தட்டி எடுத்துள்ளனர். சரியாக எழுதப் படிக்கத் தெரியாத _ பள்ளிப் படிப்பைப் பாதியில் முடித்துக் கொண்ட கோட்சே பக்கம் பக்கமாய் மணிக்கணக்கில் புலமை வாய்ந்த ஆங்கிலத்தில் பேசியதுதான் விந்தை. அவன் நீதிமன்றத்தில் படித்த உரையினை நன்றாக ஆராய்ந்தால் தெரியும் அது யாருடைய உரை என்பது. அய்யமின்றி சர்வர்கரின் எழுத்தேதான். சர்வர்கர் ஆங்கிலத்திலும் மராட்டியத்திலும் புலமை பெற்றவர். கேட்போரைக் கட்டியிழுக்கும் சொல் வீச்சினை உடையவர், அத்தகைய பேச்சாற்றலும் எழுத்தாற்றலும்தான் படிப்பறிவற்ற பாமர இளைஞர்களை அவர்தம்பால் இழுத்தது. இப்படித்தான் மராட்டிய மாநிலத்தில் இந்து மகாசபை,  போன்ற அமைப்புகள் வளர்ந்தன.
காந்தியைக் கொன்றதற்காகச் சொல்லப்பட்ட  காரணங்கள் எல்லாம் பொய்யானவை மற்றும் ஒன்றுக்கும் உப்புப்  பெறாதவை. ஏனெனில், காந்தியை  ஒரு முறை அல்ல, அய்ந்து முறை கொலை செய்ய முயற்சிக்கப்பட்டது. 1934இல் இருந்து இந்து மத வெறியர்கள் முயற்சித்துள்ளனர். அச்சமயம் பாகிஸ்தான் என்றோ பிரிவினை என்றோ பேச்சு எழாத நேரம். முஸ்லிம் லீகுகூட பிரிவினையினைப் பற்றி  நினைத்துப் பார்க்காத காலகட்டம். முஸ்லிம் லீகும், முகமது அலி ஜின்னாவும் பிரிவினை கேட்கத்  தூண்டியதே காங்கிரசும் அதன் தலைமையும்தான். நேரு தலைமையில் 1946இல் நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டியின் முடிவின்படி, சுதந்திர இந்தியாவின் நிர்வாக விஷயங்களை காங்கிரஸ் கட்சியே முடிவு செய்யும், மற்றும் எந்த அமைப்புடனும் ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தங்கள் செல்லாது என முடிவு செய்தனர். இது குறிப்பாக முஸ்லிம் லீகுக்கு விடப்பட்ட சவால். இனி காங்கிரஸ் கட்சியையும் நேருவையும் நம்பி ஏமாற முடியாது என ஜின்னா தனி நாடு கோரிக்கையை வைத்தார். இது நடந்தது 1946இல் அப்படி இருக்க 1934லேயே காந்தியைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்திருந்தால் அதற்கு வேறு காரணங்கள்தானே இருக்க முடியும். இன்னும் சொல்லப் போனால் காந்தி பிரிவினையை எதிர்த்தவர். பிரிவினைக்குப்பின் ஏற்பட்ட உயிர் இழப்புகள் அவரை பாகிஸ்தானிற்குச் சென்று அவர்களிடம் பேசி எப்படியாவது மீண்டும் இந்தியாவுடன் இணைக்க முடியுமா என்று யோசிக்க வைத்தது. அடுத்து, 55 கோடி ரூபாயைப் பொறுத்தவரை பாகிஸ்தானிற்குக் கொடுப்பதைத் தவிர  இந்தியாவிற்கு  வேறு வழியே இல்லை. ஏனென்றால், பிரிவினை சமயத்தில் போடப்பட்ட ஒப்பந்தமானது மொத்தமுள்ள பணத்தினை நிலத்தின் அளவிற்கு ஏற்ப இரு நாடுகளும் பகிர்ந்து கொள்வது என்பதாகும். இதில் முதல் தவணையாக 20 கோடி ரூபாய்  ஏற்கெனவே கொடுக்கப்பட்டுவிட்டது. இதற்கிடையில் காஷ்மீர் யாருக்கு என்பதில் இரு நாடுகளுக்கும் பிரச்சினை உருவாகியது.
மீதி ரூபாய் 35 கோடியைக் கொடுத்தால் பாகிஸ்தான் அப்பணத்தை  இந்தியாவினை எதிர்க்க ஆயுதங்கள் வாங்கப் பயன்படுத்திவிடும் என அச்சப்பட்டு, பணத்தைத் தரக்கூடாது என காங்கிரஸ் அரசாங்கம்  முடிவு செய்தபொழுது, பன்னாட்டு அழுத்தம், மற்றும் உலக அரங்கில் இந்தியாவின் நம்பகத்தன்மை அடிபட்டுப் போய்விடும் போன்ற  காரணங்களால்  நேருவின் அரசாங்கம் முடிவை மாற்றிக் கொண்டது. காந்திக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதுதான் வரலாற்று உண்மை.
உண்மை இப்படி இருக்க, காந்தியை ஏன் கொல்ல முயற்சிக்க வேண்டும்?
சர்வர்கர், கோட்சே, ஆப்டே ஆகியோர் மராட்டியத்தைச் சேர்ந்த சித்பவன் பார்ப்பனர்கள். இவர்கள் பார்ப்பனர்களில்  தங்களை உயர்வாக கருதிக் கொள்பவர்கள். சித்பவன் என்றால் புனிதத் தீயில் புத்தாக்கம் பெற்றவர்கள் எனப்  பொருள்படும். தாங்கள்  சுத்தமான ஆரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என நம்புபவர்கள்.  மகாராஷ்டிரா மாநிலம் எப்பொழுதுமே இந்து அடிப்படைவாதக்  கொள்கைக்கு ஊற்றுக்கண்ணாக இருந்து வருகிறது. இதற்கு வித்திட்டவர் பால கங்காதர திலகர். இந்தியாவில் மக்களிடம் மத உணர்வைத் தூண்டி அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற முடியும் என்பதற்கு முதன்முதலாக வழிக்கோலிட்டவர் திலகர். அந்தத் திலகரின் உரைகளைக் கேட்டும் எழுத்தினைப் படித்தும் உருவானவர் சர்வர்கர். கோட்சே, ஆப்டே, கர்கரே, பட்கே, மதன்லால் போன்ற இளைஞர்கள் சர்வர்கரினால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள். சர்வர்கருக்கு  இந்தியாவை இந்து-இந்தியாவாக மாற்ற வேண்டும் என்பது கனவு. அப்படி உருவாக்கப்படும் இந்து ராஷ்டிராவிற்கு தான் தலைமை ஏற்க வேண்டும் என்பது அவரது ஆசை. அவரது கனவிற்கும் ஆசைக்கும் குறுக்கில் நிற்பது காங்கிரசும் காந்தியும்.
அதனால் காந்தி ஒழிக்கப் படவேண்டும் என்ற நச்சு விதையினை அவர் தொடர்ந்து இளைஞர்கள் மனதில் விதைத்து வந்தார். அதனைத் தவிர இன்னொரு காரணமும் இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சி, பிற ஜாதியினரின் வளர்ச்சி இவைகள் எல்லாம் பார்ப்பனியத்திற்கு விடப்பட்ட சவாலாகக் கருதப்பட்டது. குறிப்பாக, வருணாசிரம தருமம் வீழ்த்தப்படுவதாகக் கருதினர். காந்தியின் பேச்சும் எழுத்தும் தொடக்கத்தில் வருணாசிரம தருமத்தை ஆதரித்து வந்தாலும், பின் அவரது போக்கு மாறத் தொடங்கியது. தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்றால் இந்து மதம் மாற்றம்  பெற வேண்டும் என காந்தியார் விளம்பினார். கோயில் விபச்சாரம் செய்யும் இடமாக உள்ளது என காந்தி பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். பொறுப்பார்களா சனாதனிகள்! காந்தியை ஒழிக்க முடிவு செய்துவிட்டனர். ஆகவே, காந்தியைக்  கொல்ல  இதுதான்  காரணமேயன்றி வேறு ஒன்றுமில்லை.
தாய் தந்தை அற்றவர்கள்,  கல்வியில் தோல்வியுற்றவர்கள் , சிறு வயதில் பிரச்சினையான வாழ்க்கையைக் கொண்டவர்கள் இவர்கள் எல்லோருக்கும் சர்வர்கரின் பேச்சு அருமருந்தாய் இருந்தது.. பிடிப்பற்ற அவர்களுக்கு சர்வர்கர் உற்ற தோழனாய் , தனயனாய், தந்தையாய் விளங்கினார். துசார் காந்தியை மனம் நோகச் செய்தது காந்தியின் உயிரைப் பாதுகாப்பதில் போலீஸ் மற்றும்  அரசு காட்டிய மெத்தனங்கள். 1948, ஜனவரி 20ஆம்  தேதி பிர்லா  மாளிகையில் கையெறி குண்டு மற்றும் துப்பாக்கி மூலமாக காந்தியை வீழ்த்த கொலையாளிகள் முயற்சிக்கின்றனர். அம்முயற்சி தோல்வியடைந்து மதன்லால் என்கிற கூட்டாளியைக்  காவல் துறை கைது செய்கிறது. அவனது வாக்குமூலத்தில் எல்லா உண்மைகளும் வெளிவருகின்றன. அவன் கோட்சே, ஆப்டே மற்றும் கர்கரே போன்றவர்களின் பெயர்களை போலீசிடம் சொல்லிவிடுகிறான். 24 மணி நேரத்தில் டெல்லி காவல் துறையினர் அவனிடமிருந்து பெரும்பான்மையான தகவல்களைப் பெற்றுவிடுகின்றனர்.
இந்தக் குற்றத்தை விசாரணை செய்யும் சிறப்பு அதிகாரி சஞ்சீவி, எப்படியாவது தப்பிச் சென்ற மற்றவர்களைப் பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் மதன்லாலின் வாக்குமூலத்துடன் இரு காவலர்களைப் பம்பாய்க்கு அனுப்புகிறார். ஆனால், பம்பாயில் இந்த காவல் துறை உயர் அதிகாரி நகர்வாலா டெல்லியிலிருந்து வந்த தகவல்களைப் புறம்தள்ளி காவலர்களை டெல்லிக்குத் திரும்பிச் செல்லும்படி விரட்டிவிடுகிறார். அதுமட்டுமின்றி, நகர்வாலா இன்னொரு தவறும் செய்கிறார். மதன்லால் கைது செய்யப்பட்ட செய்தியினை நாளிதழில் படிக்கும் டாக்டர் ஜெயின் என்பவர், மதன்லாலும் இன்னொரு கூட்டாளி கர்கரேயும் தன்னை ஜனவரி 14ஆம்  தேதி  தன் வீட்டில் சந்தித்து காந்தியைக் கொல்லப் போகிறோம் என்று கூறியதை நினைவுகூர்ந்து அச்செய்தியினை மாநில உள்துறை அமைச்சர் மொரார்ஜி தேசாயிடம் (பின்னாளில் இந்தியாவின் பிரதம மந்திரியாகப் பதவி வகித்தவர்) பகர்கிறார். செய்தியைக் கேட்டுப் பதற வேண்டிய மொரார்ஜி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அனுப்பிவிடுகிறார். பின் மொரார்ஜி, நகர்வாலாவைத் தன் வீட்டிற்கு அழைக்க, அவர், தான் தற்சமயம் வேறு ஒரு பணியில் இருப்பதாகக்  கூறுகிறார். அதற்கு மொரார்ஜி, தான் மாலை ஊருக்குச் செல்ல வேண்டியிருப்பதால்  இரயிலடியில் சந்திக்கும்படி விளிக்கிறார். இரயிலடியில்  செய்தியைக் கேட்டறிந்த நகர்வாலா, முறையான _ ஒழுங்கான விசாரணையினைச் செய்யத்  தவறிவிடுகிறார். இதில் கொடுமையென்னவெனில், கர்கரே என்பவன் ஏற்கெனவே போலீஸால் வேறு ஒரு குற்றத்திற்காகத் தேடப்பட்டு வருபவன்.
இதற்கிடையில் வெறும் கையுடன் டெல்லி திரும்பிய காவலர்கள் பம்பாயில் நடந்ததை சிறப்புக் காவல் அதிகரி சஞ்சீவிடம் தெரிவிக்கின்றனர். இந்த அதிகாரியும் பம்பாய் காவல் துறையின் போக்கினை மத்திய  உள்துறை அமைச்சர் பட்டேலிடமோ வேறு முக்கிய அமைச்சர்களிடமோ சொல்லி அதைச் சரி செய்து கொள்ளாமல் ரானே என்கிற இன்னொரு அதிகாரியை மீண்டும் பம்பாய்  அனுப்புகிறார். விமானத்தில் பறந்து செல்ல வேண்டிய ரானே ரயிலில் செல்ல முடிவெடுக்கிறார். (பின்னாளில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் பொழுது, விமானப்  பயணம் தனக்கு அச்சம் அளிக்கக்கூடியது. எனவே, அதைத் தவிர்த்ததாகக் கூறுகிறார். நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொண்டது.) அதுவும் டெல்லியிலிருந்து அலகாபாத் வழியாக ஏறத்தாழ 36 மணி நேரம் பயணித்து பம்பாய் நகரை அடைகிறார். இடையில் அலகாபாத்தில் மதச்  சடங்கிற்காக இறங்கி நேரத்தை வீணடிக்கிறார். இவர் பம்பாய் போய்ச் சேரும்பொழுது கொலையாளிகள் பம்பாயை விட்டு வெளியேறி டெல்லி நகரை அடைகின்றனர்.
காவல்துறையினரின் அலட்சியப் போக்கு இங்ஙனம் என்றால் ஆட்சியாளரின் போக்கு இன்னும் வித்தியாசமானது. இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்ட வல்லபாய் பட்டேல் இந்து அடிப்படைவாதியாகத்தான் இருந்தார். தான் பிரதம மந்திரியாக முடியாமல் போனதற்கு காந்தி முக்கியக்  காரணம் என்று கருதினார். காந்தியின் உயிருக்கு ஆபத்து என்றவுடன் கூடுதலான எச்சரிக்கையோடு பாதுகாப்பைப் பலப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், மத்திய உள்துறை அமைச்சர், 30 கோடி மக்களின் உயிருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய துறையின் தலைவர், நாட்டின் தந்தை காந்திக்குப் பாதுகாப்பு அளிக்கத்  தவறினார். காந்தி, தன்னைச் சந்திக்க வருபவர்களை பாதுகாப்பு என்கிற பெயரில் சோதனைக்கு உட்படுத்தக் கூடாது என கண்டிப்பாகக் கூறியிருந்தார். என் பாதுகாப்பு இறைவனின் கைகளில். ஆகவே இறைவனுக்கு உகந்தாத  காரியத்தை நான் செய்ய மாட்டேன் என்று தடுத்துவிட்டார். (இறைவனைப் பாதுகாக்கவே காவலர்களும், வெடிகுண்டு கண்டறியும் கருவிகளும் தேவை என்பதை காந்தியார் உணர மறந்ததுதான் வேடிக்கை). சரி, அப்படித்தான் காந்தியின் விருப்பப்படி இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் சாதாரண உடை அணிந்த காவலர்களை பிர்லா இல்லத்தில் உலவவிட்டிருந்தால், கோட்சே, ஆப்டே மற்றும் கர்கரே ஆகியோரை எளிதாகப் பிடித்திருக்கலாமே? ஜனவரி 30 அன்று கொலை நடப்பதற்குச் சில மணி நேரங்கள் முன்கூட கோட்சே பிர்லா  இல்லத்தில் வேவு பார்த்தானே, அதைக்கூடத் தடுக்க முடியவில்லையே. பட்டேலின்  அலட்சியப் போக்கு காந்தியின் உயிரைப் பலி கொண்டு விட்டது.
இன்றைக்கு இந்துத்துவக் கூட்டம் பட்டேலை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறது. பிரிட்டிஷாரின் பிரிவினைக்கான திட்டத்தை முதலில் ஏற்றுக்கொண்டவர்களில் பட்டேல் முக்கியமானவர். அதுமட்டுமின்றி, பாகிஸ்தானுக்கு ரூபாய் 55 கோடி கொடுக்கும் தீர்மானத்தில் முதலில் கையெழுத்துப் போட்டவரும் பட்டேல்தான். அப்படியிருக்க, இந்துத்துவச் சக்திகள் பட்டேலை புனித உருவமாகச் சித்தரிக்க முயல்வதும், காந்தியின்மீது  வீண்  பழி சுமற்றுவதும்  உள் நோக்கமுடையது. காந்தியின் செல்லப்  பிள்ளையான நேரு சுதந்திர இந்தியாவின் பிரதமர் ஆக வேண்டும் என்ற கனவில், கொஞ்சம் கொஞ்சமாக காந்தியின் கொள்கைகளிலிருந்தும் காந்தியிடம் இருந்தும் விலகிச் சென்று கொண்டிருந்தார். பஞ்சாப் மாநிலம் மேற்கு கிழக்காக இரண்டாகப் பிரிக்கப்படுகிறது என்ற முக்கியமான செய்தியினைக்கூட காந்தியிடம் விவாதிக்கத் தவறினார். நேருவிற்கும் ஏனைய காங்கிரஸாருக்கும் உயிரோடு இருக்கும் காந்தியைவிட காந்தி என்கிற பிம்பம்தான்  வசதியாக இருந்தது. அவர்களைப் பொறுத்தவரை காந்தியை  ஒரு சுமையாகத்தான் கருதினார்கள்.
ஆயிரம் பக்கங்கள் கொண்ட இந்த நூல் படிப்பதற்கு மிக எளிமையாகவும், விறுவிறுப்பாகவும் உள்ளது. குறிப்பாக ஜனவரி 9ஆம் தேதி முதல் ஜனவரி 30ஆம் தேதி காந்தி கொல்லப்படும்  வரை, நாள்தோறும் நடந்த நிகழ்வுகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. கொலையாளிகளின் திட்டம், அந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வழிமுறைகள், கொலையை நிறைவேற்றுதல் என்று அடுத்தது என்ன என்ற ஆவலைத் தூண்டும் வகையில் எழுதியிருப்பது துசார் காந்தியின் சிறப்பு. இந்திய வரலாற்றுப் பக்கங்களை_ குறிப்பாக சுதந்திரம் பெற்ற காலம், நாட்டின் பிரிவினை, ஆட்சியாளரின் போக்கு, இந்துவெறியர்களின் ஆட்டம், காந்தியின் கொலை, வழக்கு, வாக்குமூலம், தண்டனை  என பல்வேறு செய்திகளை அறிந்து கொள்ள உதவும் அற்புதமான பொக்கிஷம்.
- வெளிச்சம்

நினைவலைகள் : காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப்

இந்தியாவின் தனிச் சிறப்பு மிக்க அரசியல் தலைவர்களுள் ஒருவரான காயிதே மில்லத்
முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களின் 116 ஆவது பிறந்த நாள் இன்று அரசியல் சமூக அரங்கில் நினைவு கூரப்படுகிறது.
ஜூன் மாதம் 05 ம் நாள் 1896 ஆம் ஆண்டு நெல்லையில் பிறந்த இஸ்மாயில் சாஹேப் தமிழக அரசியல் வானில் சுடர் விட்டு ஒளிர்ந்த நட்சத்திரங்களுள் ஒருவராவார்.
அரசியல் சமூக வாழ்க்கையில் அப்பழுக்கற்ற தலைவராகத் திகழ்ந்த காயிதே மில்லத், முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக இருந்த போதும் அனைத்து கட்சியினர் மற்றும் இனமக்களின் அபிமானத்தைப் பெற்றிருந்தார். மோசமான களம் எனப்படும் அரசியலில் முழு வீச்சோடு இருந்தும் கண்ணியவானாக விளங்கினார். அதனால் தான் கண்ணியத்துக்குரிய என்கிற அடைமொழியோடே இன்றும் அனைவராலும் நினைவு கூரப்படுகிறார்.
இந்திய நாட்டின் விடுதலைக்காக தனது படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு காந்திஜியின் தலைமையின் கீழ் ஒத்துழையாமை இயக்கம் கண்டவர் காயிதே மில்லத். திருச்சி ஜோசப் கல்லூரியில் பயின்ற காயிதேமில்லத், பிறகு சென்னை கிறிஸ்தவ கல்லூரியிலும் படித்து பி.ஏ. பட்டம் பெற 2 மாதம் இருந்தபோது, காந்திஜியின் அழைப்பை ஏற்று, காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். 1920-ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூலம் குதித்தார். அந்த ஆண்டில் திருநெல்வேலியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ஒத்துழையாமை இயக்கத் தீர்மானத்தை பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றிக் காட்டினார்.
அப்போதைய சென்னை ராஜதானி (மாகாண) சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் காயிதே மில்லத் பொறுப்புகள் வகித்தார். 1952-ம் ஆண்டு முதல் 58-ம் ஆண்டு வரை டெல்லி மேலவை உறுப்பினராகவும் பதவி வகித்தார். 1962, 1967, 1971 தேர்தல்களில் நாடாளுமன்ற மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட காயிதேமில்லத், தொகுதிக்குச் செல்லாமலே வென்றவர் என்பது குறிக்கத்தக்கது.
இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்க தமிழே அதிகத் தகுதிவாய்ந்தது என்று நாடாளுமன்றத்தில் காயிதேமில்லத் முழங்கினார். பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின்னர், 1947ல் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியினர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பங்காக அளித்த சுமார் 17 இலட்ச ரூபாய் தொகையை காயிதேமில்லத் 'தேவையில்லை' என்று மறுத்தொதுக்கினார்.
தான் பணிபுரிந்த ஜமால்முஹம்மது நிறுவனத்திலேயே நிர்வாகப் பங்குதாரராக உயர்ந்த காயிதேமில்லத், தனது சொத்துக்களை சமுதாயத்திற்கு வாரிவழங்கிய வள்ளலாகவும் திகழ்ந்தார்.
அரசியல் நுணுக்கங்களை நன்கு அறிந்து, கொள்கையை விட்டுக்கொடுக்காமல், நெருக்கடிகளின்போதும் தளராமல், பொய்யான புகழுரை, பிம்பங்களுக்கு மயங்காமல் சமூக நலனுக்காகவே தம்மை அர்ப்பணித்த நல்ல அரசியல் தலைவரான காயிதே மில்லத், ஒழுக்க விழுமம் சார்ந்து அரசியல் களப்பணி செய்ய விரும்பும் இன்றைய அரசியல் இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாவார் என்றால் மிகையில்லை.
--இப்னு ஹம்துன்

Saturday, July 6, 2013

தமிழ்நாடு இழந்த பகுதிகள்!

நம் அரசியல் தலைவர்கள் அக்கறை காட்டாததால் தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள்.
அந்தப் பகுதிகள் நம்மிடம் இருந்திருந்தால் இன்று நாம் சந்திக்கும் நதி நீர்ப் பிரச்சினைகள் இருந்திருக்காது
'முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளத்தவர் நடந்து கொள்ளும் முறையைப் பார்க்கும் போது கேரளாவோடு சேர்க்கப்பட்ட தமிழ் நிலப் பகுதிகளான தேவிகுளம், பீரிமேடு போன்ற பகுதிகளை மீண்டும் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று கேட்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது’ என்று இன்று அரசியல்வாதிகள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஆனால், வரலாற்றை திரும்பிப் பார்த்தால் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழ்நாடு இழந்த பகுதிகள் பல. அவை தமிழ்நாட்டோடு இருந்திருந்தால் இன்று நாம் சந்திக்கும் நதி நீர்ப் பிரச்சினைகள் இருந்திருக்காது. முல்லைப் பெரியாறு மட்டுமல்ல, காவிரி, பாலாறு பிரச்சினைகள்கூட. நாம் இழந்த நிலப் பகுதிகளை ஒப்பிடுகையில் தேவிகுளம், பீரிமேடு என்பது, கஜானாவையே கொள்ளை கொடுத்து விட்டு ஒற்றை மூக்குத்தியை மட்டும் திரும்பக் கேட்பது போலத் தான். ஏனென்றால், தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள்.
அப்படி பல்லாயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதிகளை தமிழகம் இழக்கக் காரணம், நமது அரசியல் கட்சிகள். இந்தக் கட்சி, அந்த இயக்கம் என்ற பேதம் இல்லாமல் எல்லோருமே அந்த இழப்புக்கு துணை போன அரசியலையே செய்தார்கள் என்பது வரலாறு முன் வைக்கும் கசப்பான உண்மை.
நாடு விடுதலை பெற்றதும் மொழிவாரி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்ற குரல்கள் அடுத்தடுத்து இந்தியா முழுக்க எழுந்தன. அப்படிக் குரல் எழுப்பியவர்கள் பிரிவினைவாதிகள் அல்ல. வெள்ளையனை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றவர்கள். அதிலும் குறிப்பாக காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தவர்கள்.
முதன் முதலில் மராத்தி மொழி பேசும் மக்களுக்கு தனியாக மராட்டிய மாநிலம் அமைக்க வேண்டும் என்று ‘சம்யுக்த மகாராஷ்டிரா சமிதி’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, போராடத் துவங்கியவர் விடுதலைப் போராட்ட தியாகியான சங்கர்ராவ் தேவ். அடுத்து, குஜராத் மாநிலத்தில் ‘மகா குஜராத் ஜனதா பரிஷத்’ என்ற அமைப்பின் மூலம் போராடத் துவங்கினார் இந்துலால் யக்னிக்.
அதன் பிறகு தென்னிந்தியாவில் தனி ஆந்திர மாநிலப் போராட்டம் எல்லாவற்றையும்விட பெரிய அளவில் விஸ்வ ரூபம் எடுத்தது. அடுத்து கர்நாடகா, கேரளாவிலும் போராட்டங்கள். ஆனால், தமிழ்நாட்டில் அப்படி ஒரு போராட்டம் எழவே இல்லை. இங்கிருந்த தேசிய உணர்வு, திராவிட உணர்வு இரண்டுமே அதற்கு காரணம்.
வெள்ளையர் ஆட்சியில், சென்னை ராஜதானி என்ற பெயரில் இன்றைய நான்கு தென் மாநிலங்களும் ஒன்றாக இருந்தன. அதனால், சென்னையும் தமிழ் மண்ணும் அரசியல் சமூகரீதியாக கேரள, ஆந்திர, கன்னடர்களும் உரிமையோடு செயல்படும் நிலமாகவே இருந்தது.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தென் இந்தியாவில் கேரள, கன்னட, ஆந்திர மாநிலத்தவர் காலகாலமாக தமிழ் நிலப் பகுதிகளாக இருந்த பகுதிகளை தங்கள் மாநிலத்தோடு இணைக்கக் கோரி போராடினர். அதில் முதன் முதலாக வெற்றி பெற்றவர்கள் கேரள மாநிலத்தவர்தான்.
அகஸ்தீஸ்வரம், தோவாளை, நெய்யாற்றுப் பகுதி, நெடுமங்காடு, இடுக்கி மாவட்டத்தின் பெரும்பகுதி, வண்டிப் பெரியாறு, தேவிகுளம், பீரிமேடு, குமுளி, கொச்சின், சித்தூர், பாலக்காடு பகுதிகள் போன்றவை எல்லாம் இன, மொழி, வரலாற்று, இலக்கிய ரீதியாக தொடர்புடைய தமிழகத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை.
மொழிவாரி மாநிலப் போராட்டம் பொங்கி பிரவகித்த நிலையில் 1954ம் ஆண்டு மொழிவாரி மாநிலம் பற்றி ஆராய்ந்து அறிக்கை தர, பசல் கமிஷன் என்ற ஒரு கமிஷனை மத்திய அரசு நியமித்தது. அந்த கமிஷனிடம் கேரளத்தவர்கள் மேலே குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர கோவை மாவட்டத்தின் மேற்குப் பகுதி, நீலகிரி, கூடலூர், ஊட்டி ஆகிய பகுதிகளையும் கேட்டனர்.
அன்று (இன்று போல) கேரளத்தவர்கள் அரசியலிலும் நிர்வாகத்திலும் செல்வாக்கோடு இருந்தனர். அன்று நேருவின் அமைச்சரவையிலும் வெளிநாட்டுக் கொள்கை ரீதியான பதவிகள், அயல்நாட்டு தூதரகப் பதவிகள், சர்வதேச நெருக்கடிகளுக்கு பரிகாரம் காணும் பதவிகள், மூன்று மெய்க்காப்பாளர் பதவிகள், நேருவின் அந்தரங்கச் செயலாளர் பதவி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பதவி, பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்று பல பொறுப்புக்களில் கேரளத்தவர் இருந்தனர்.
தவிர மொழிவாரி மாநிலம் பற்றி ஆராய்ந்து அறிக்கை தர அமைக்கப்பட்ட பசல் கமிஷனிலேயே கே.எம். பணிக்கர் என்ற மலையாளி பொறுப்பில் இருந்தார். தமிழகம் சார்பில் யாரும் இல்லை. அவர், ‘தனக்கு தேவிகுளம், பீரிமேடு பகுதிகளில் நிறைய தேயிலைத் தோட்டங்கள் இருப்பதால் அவற்றை தமிழ்நாட்டுக்குத் தர முடியாது’ என்று சொன்னதாகக் கூறப்படுகிறது 
ஆனால், இந்த விஷயத்தில் கேரளத்தவரை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. நம் அரசியல்கட்சிகளும், தலைவர்களும் தமிழ் மண்ணைவிடக் கட்சி விசுவாசத்திற்கே முக்கியத்துவம் அளித்தனர்.
தேவிகுளம், பீரிமேடு பகுதிகளை கேரளத்தோடு இணைப்பதற்கு எதிராகப் போராடிய பி.எஸ்.மணி என்ற தலைவர் சென்னை வந்து காமராஜரை சந்தித்து, ‘தேவிகுளம், பீரிமேடு பகுதிகள் காப்பாற்றப்பட வேண்டும்’ என வேண்டினார். அப்போது காமராஜர், ‘குளமாவது மேடாவது, இந்தியாவில்தானே இருக்கிறது மணி, காங்கிரஸ் வேலையைப் போய்ப் பார்’ எனச் சொல்லி அனுப்பினார். மணி, ‘தினமணி’ ஆசிரியர் ஏ.என்.சிவராமனைச் சந்தித்து பிரச்சினையை விளக்கினார். அவர், ‘குளமாவது மேடாவது’ என்ற தலைப்பில், ‘தினமணி’யில் தலையங்கம் ஒன்று எழுதினார். சி.சுப்ரமணியம் ஒருமுறை, ‘தேவிகுளம், பீரிமேடு நமக்கு வேண்டும்’ என சட்டமன்றத்தில் வாதிட்டவர். ஆனால், மத்திய தலைமையின் கருத்து வேறாக இருக்கிறது எனத் தெரிந்தபோது, 1956 மார்ச் 28ம் தேதி பசல் கமிஷனின் அறிக்கையை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தி அதை ஏற்குமாறு வாதிட்டவரும் அவர்தான்.
தேவிகுளம், பீரிமேடு போராட்டம் பற்றி விவாதிக்க 1956ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்று நடந்தது. அதில் அண்ணா கலந்து கொள்கிறார் என்ற காரணத்தால் பெரியார் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை (காண்க: அண்ணாவின் கடிதம்). ‘மொழிவழி பிரிந்து இனவழி ஒன்றுபட்டு சோஷலிச திராவிடக் குடியரசு கூட்டாட்சி’ காணும் கனவில் இருந்த திமுக, காங்கிரசிற்கு எதிராகக் கூட்டணி காண்பதிலும் மாநில உரிமைகள் சார்ந்த வேறு பிரச்சினையிலும் காட்டிய ஆர்வத்தை இந்தப் பிரச்சினையில் காட்டவில்லை. ‘பெரியாரும் அண்ணாவும் தட்சிணப் பிரதேசத் திட்டத்தை எதிர்ப்பதிலேதான் அதிக அக்கறை காட்டினார்கள். தேவிகுளம், பீரிமேடு பிரச்சினையில் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை’ என்று, ‘எனது போராட்டங்கள்’ நூலில் எழுதுகிறார் ம.பொ.சி.
பிரச்சினை வலுவாக இருந்தபோது அந்த ஆண்டு கம்யூனிஸ்டுக் கட்சியின் அகில இந்திய மாநாடு சென்னையில் நடக்க வேண்டி இருந்தது. ஆனால், கேரள மாநிலத்தவர் அதை தங்கள் செல்வாக்கால் கேரளாவுக்கு மாற்றினர். அங்கு திடீர் என அந்த மாநாட்டில், ‘தேவி குளம், பீரிமேடு பகுதிகள் கேரளாவுக்கே சொந்தம்’ என்று தீர்மானம் போட, தமிழக கம்யூனிஸ்ட் தலைவர்கள் அதை எதிர்க்காமல் கட்சிக் கட்டுப்பாடு என்ற பெயரில் அதை ஏற்றுக் கொண்டனர். (ஆனால், ஜீவா எல்லைகளை மீட்கத் தொடர்ந்து போராடினார்).
அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்தவர் கேரளத்தைச் சேர்ந்தவர். தேவிகுளம், பீரிமேடு பகுதிகள் யாருக்கு சொந்தம் என்பது பற்றிப் பேச, தமிழக-கேரள மாநிலத் தலைமைச் செயலாளர்களின் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளரான வர்கீஸ் அந்தப் பகுதிகளை கேரளாவுக்குத் தர சம்மதம் தெரிவித்துக் கையெழுத்திட்டார். ‘தமிழக அரசின் தலைமைச் செயலாளரான நீங்கள் இப்படி தமிழகத்துக்கு எதிராக கையெழுத்துப் போடலாமா?’ என்று ஒரு நிருபர் கேட்டபோது, ‘அந்தப் பகுதிகள் இல்லாவிட்டால் கேரளா ரொம்பக் கஷ்டப்படும்’ என்றார் வர்கீஸ்.
இவற்றிற்கு எதிராக நேசமணி, ம.பொ.சிவஞானம் போன்றோர் செய்த சில போராட்டங்களின் விளைவாக கேரளத்தவர் தங்களுக்கு கொண்டு போக நினைத்த செங்கோட்டை, அகஸ்தீஸ்வரம், தோவாளை, கன்னியாகுமரி பகுதிகள் மட்டும் மீட்கப்பட்டன. ஆனால், தமிழகத்தோடு சேர வேண்டிய சுமார் 1,500 சதுர கிலோமீட்டர் நிலப் பகுதி கேரளாவுக்கு போயிற்று. அதில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது செங்கோட்டை தாலுகாவில் இருந்த சில பகுதிகள். 1950களிலேயே ஆண்டுக்கு சுமார் எட்டு கோடி ரூபாய் வருமானம் தந்து கொண்டிருந்த வனப் பகுதியை தமிழகம் இழந்தது.
இந்த 1,400 சதுர கிலோமீட்டர் பகுதி மட்டும் நியாயமாக தமிழகத்துக்கு வந்திருந்தால்...
இன்று முல்லைப் பெரியாறு பகுதி முழுக்க நம்மிடம் இருந்திருக்கும். பிரச்சினையே கிடையாது.
பவானி நதிப் பிரச்சினை கிடையாது.
தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய வடிவமான கண்ணகிக் கோயில் நம்மை விட்டுப் போயிருக்காது. அங்கு நாம் வழிபடப் போனாலே, கேரள போலீசாரிடம் அடிபடும் நிலைமை வந்திருக்காது.
சிறுவாணி அணையின் ஒரு பகுதியை தம்மிடம் வைத்துக்கொண்டு சிறுவாணித் தண்ணீருக்கும் கடிவாளம் போட கேரளத்தவர் போடும் நினைப்புகளுக்கே வாய்ப்பிருந்திருக்காது.
எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம், தமிழகத்துடன் சேர வேண்டிய 1,400 சதுர கிலோமீட்டர் பரப்பை நாம் இழந்ததுதான்.
கேரளாவிடம் இழந்தது இப்படி என்றால், ஆந்திராவிடம் இழந்தது இன்னும் அதிகம்.
சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு ஆந்திராவின் ராயல சீமாவே தமிழர்கள் அதிகம் வாழ்ந்த பகுதிதான். திருப்பதிக் கோயில் கருவறை சுவர் கல்வெட்டுகளில்கூட தமிழ் எழுத்துகளே உள்ளன. திருப்பதியில் இருந்த தனித்தமிழ் பள்ளிகள், அங்கு தமிழ்க் கலை காலகாலமாக வளர்ந்த விதமே அழகு.
1912ம் ஆண்டு ஆந்திரப்பிரதேச காங்கிரஸ் சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரப் பகுதிகளை பிரித்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. தமிழகத்தில் திராவிடம் பேசிக் கொண்டிருந்த நீதிக் கட்சியின் ஆந்திரப்பிரதேசக் கிளையும் அதே கோரிக்கை வைத்தபோது இங்கிருந்த நீதிக்கட்சிப் புரவலர்கள் அதைக் கண்டிக்கவில்லை.
மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டிய சித்தூர் மாவட்டம், நெல்லூர் மாவட்டம், இவற்றில் தங்கிய திருப்பதி, காளகஸ்தி, புத்தூர், நகரி, ஆரணியாறு, வடபெண்ணை ஆறு, பொன்வாணி ஆறு இவற்றின் வளமான பகுதிகள், நந்தி மலை இவை எல்லாம் ஆந்திராவோடு போயின.
இதன் பின்னால் விதியின் விளையாட்டு ஒன்றுண்டு.
மொழிவாரி மாநிலப் பிரிவினைக்காக அமைக்கப்பட்ட பசல் கமிஷன் ஒரு விதியை வரையறுத்தது. அதாவது, பிரச்சினைக்குரிய பகுதிகளில் வாழும் மக்களின் மொழி என்ன என்பது முக்கியம் இல்லை. அங்கு உள்ள நிலம் யாருக்கு அதிகம் உரிமைப்பட்டதாக உள்ளது என்பதைப் பொறுத்தே சம்பந்தப்பட்ட மாநிலத்துடன் இணைக்கப்படும் என்று முடிவு எடுத்தது. அதன்படியே கேரள எல்லையை ஒட்டிய தமிழ் நிலப்பகுதிகள் கேரளாவுடன் இணைக்கப்பட்டன.
ஆனால், தமிழ்நாடு-ஆந்திரப் பிரிவினையின்போது நடந்தது என்ன தெரியுமா?
வடக்கே இருந்து பிழைப்பு தேடி வந்த தெலுங்கு பேசும் மக்கள் நெல்லூர், சித்தூர் பகுதிகளில் குறிப்பிட்ட எண்ணிகையில் இருந்தனர். ஆனால், நிலத்தின் உரிமையாளர்கள், தமிழர்களாகவே இருந்தனர். ஆனாலும் இங்கு விதியைத் தலைகீழாக மாற்றியது அப்போது மத்திய அரசு அமைத்த படாஸ்கர் கமிஷன் என்ற கமிஷன், ‘நிலம் யாருடையது என்பது முக்கியம் அல்ல. வாழும் மக்களின் மொழிதான் முக்கியக் கூறு’ என்று சொல்லி எல்லா பகுதிகளையும் ஆந்திராவுடன் இணைத்தது.
வடபகுதியில் மங்கலங்கிழார், ம.பொ.சிவஞானம் போன்றோர் மட்டுமே இதை எதிர்த்து தீவிரமாகப் போராடினர். இராஜாஜி இவர்களுக்கு ஆதரவாக இருந்தார். ஆனாலும் தமிழத்தின் தேசிய திராவிட அரசியல் நிலவரம் இந்த அநியாயங்களை தடுக்க பெருவாரியாக முன் வராததால், முறைப்படி தமிழகத்துக்கு வர வேண்டிய நிலப் பகுதியில் திருத்தணி, வள்ளி மலை, திருவாலங்காடு போன்ற பகுதிகள் மட்டுமே தமிழகத்துக்கு கிடைத்தன.
1960ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி வரையறுக்கப்பட்ட எல்லைகள்படி தமிழ்நாட்டுடன் இருந்த 32,000 சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதி ஆந்திராவுக்கு தரப்பட்டது. சேலம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து சுமார் 525 சதுர கிலோமீட்டர் பகுதி, ஆந்திராவுக்கு அளிக்கப்பட்டது. ஆரணியாறு அணைக்கட்டு ஆந்திராவுக்குப் போனது. திருப்பதி பறிபோனது. காளஹஸ்தி போனது. நந்தி மலை போனது. நந்தி மலை நம்மோடு இருந்திருந்தால் பாலாற்றுப் பிரச்சினை எழுந்திருக்காது.
சென்னையையே ஆந்திரர்கள் தங்களுக்குக் கேட்டார்கள். பல தமிழ் நிலப் பகுதிகளை இழந்து அதைத் தக்கவைத்துக் கொண்டார்கள் நம் அரசியல்வாதிகள்.
இந்த கேரள, ஆந்திர, சென்னை விவகாரங்களிலாவது அரசியல் கட்சிகள் சில போராட்டங்களை நடத்தின. அறிக்கைகள் விட்டன. ஆனால், கர்நாடகாவிடம் நாம் இழந்தது என்பது தூக்கத்தில் திருட்டுக் கொடுத்ததற்கு சமம்.
காவிரி எங்கே உற்பத்தி ஆகிறது என்றால், குடகு மலை என்று எல்லோருக்கும் தெரியும். பழந்தமிழில் குடக்கு என்றால், மேற்கு என்று பொருள். அங்கு வாழும் மக்கள் பேசும் மொழி கூர்க் மொழி. சுமார் முக்கால் நூற்றாண்டுக்கு முன்புவரை கன்னடர்களும் கூர்க் மக்களும் அரசியல் ரீதியாக விரோதம் பாராட்டிக் கொண்டிருந்தார்கள். அதனால், மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது இந்த கூர்க் மக்கள், ‘நாங்கள் எங்கள் மொழி மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையாக இருக்கும் தமிழ்நாட்டோடு இணைந்து விடுகிறோம்’ என்று சொன்னார்கள். அதற்காக அந்த மக்கள், கன்னடர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி சிறிய அளவில் போராடியதுகூட உண்டு. நாம் சற்றே கண் காட்டி இருந்தால்கூட அவர்கள் ஓடி வந்து ஒட்டிக் கொண்டிருப்பார்கள்.
அப்படி தமிழகத்தோடு இணைந்து இருந்தால், காவிரித்தாய் ‘தமிழகத்திலேயே’ உற்பத்தியாகி, தமிழகத்திலேயே கடலில் கலந்திருப்பாள். நமக்கு காவிரிப் பிரச்சினையே வந்திருக்காது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் பதராகி இருக்காது.
கன்னடர்கள் திட்டமிட்டுப் போராடியதால் முறைப்படி தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய பெங்களூரு, மைசூரு மாவட்டத்தின் ஒரு பகுதி, கோலார் தங்கவயல் பகுதிகள் கர்நாடகாவுக்குப் போயின.
பெங்களூரைத் தங்கள் வசமாக்கிக்கொள்ள கர்நாடகத்தினர் காய் நகர்த்திய விதம், அவர்கள் எவ்வளவு புத்திசாலிகள் என்பதைக் காட்டுகிறது. ஒரு மாநிலத்துடன் ஒரு பகுதி இணைக்கப்பட வேண்டும் என்றால் முதலில் நிலத் தொடர்பு, அடுத்து மொழித் தொடர்பு இருக்க வேண்டும் என்பது விதி. ஓசூரில் அப்போது தெலுங்கு பேசுவோர் 39 சதவிகிதமும் அடுத்து, கன்னடம் பேசுவோர் 35 சதவிகிதமும் இருந்தனர். தெலுங்கு பேசும் மக்களே அதிகம் இருந்தாலும் ஆந்திராவோடு நிலத்தொடர்பு இல்லை என்ற காரணத்தால், அதை ஆந்திரா கைவிட்டது. அன்று அது வறண்ட பூமி என்பது வெளியே சொல்லப்படாத காரணம். ஆந்திராவோடு அது இணைக்கப்படாத பட்சத்தில் கன்னடம் பேசுவோர் அதிகம் இருந்ததால், அதை கர்நாடகாவோடுதான் இணைத்திருக்க வேண்டும். ஆனால்-
பெங்களூரு விவகாரம் வந்தபோது, கன்னட மக்கள் அதிகம் இருந்தாலும் நாங்கள் ஓசூரை தமிழகத்துக்குக் தந்துவிட்டோம். அதற்குப் பதிலாக கன்னடம் பேசும் மக்களை விட தமிழ் பேசும் மக்கள் அதிகம் இருந்தாலும் நாங்கள் பெங்களூரை எடுத்துக்கொள்கிறோம் என்று கோரிக்கை வைத்தது கர்நாடகா.
தமிழகம் அதற்கு உரிமையான நிலப்பகுதிகளை இழந்ததற்கு, தமிழகத்தில் அன்று நிலவிய மண் சார்ந்த உணர்வு இல்லாத- வாய்ச்சவடால் அரசியல்தான் காரணம்.
இன்றைய தமிழகத்தின் பரப்பளவு 1,30,609 சதுர கிலோமீட்டர்கள் தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள். இவையும் நம்மோடு இருந்திருந்தால் தமிழகம், கர்நாடகாவைவிட இன்னும் பெரிய மாநிலமாக இருந்திருக்கும். அப்போதும் ஆந்திராவைவிட சற்று சிறிய மாநிலமாக இருந்திருக்கும் என்றாலும்கூட, தமிழகமே மற்ற தென்னிந்திய மாநிலங்களைவிட வளமான மாநிலமாக இருந்திருக்கும்.